சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8.101  
சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க
பண் - (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கலிவெண்பா
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க! ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க! ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க! | [1] |
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க! பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க! புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க! கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க! சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க! | [2] |
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி! தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி! நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி! மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி! சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி! | [3] |
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி! சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, சிந்தை மகிழ, சிவபுராணம் தன்னை, முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்: | [4] |
கண்ணுதலான், தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி, எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி; விண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்காய், விளங்கு ஒளியாய்! எண் இறந்து, எல்லை இலாதானே! நின் பெரும் சீர், பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்; | [5] |
புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி, பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகி, கல்ஆ(ய்,) மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய், வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய், செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள், | [6] |
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்! மெய்யே, உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்; உய்ய, என் உள்ளத்துள், ஓங்காரம் ஆய் நின்ற மெய்யா! விமலா! விடைப் பாகா! வேதங்கள் ஐயா என, ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற, நுண்ணியனே! | [7] |
வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம் விமலா! பொய் ஆயின எல்லாம் போய் அகல, வந்தருளி, மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச் சுடரே! எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே! அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே! | [8] |
ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும் ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய், போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்; நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே! மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே! | [9] |
கறந்த பால், கன்னலொடு, நெய் கலந்தால் போலச் சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று, பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்! நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த மறைந்து இருந்தாய், எம்பெருமான்! வல்வினையேன் தன்னை | [10] |
மறைந்திட மூடிய மாய இருளை, அறம், பாவம், என்னும் அரும் கயிற்றால் கட்டி, புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, | [11] |
விலங்கு மனத்தால், விமலா! உனக்குக் கலந்த அன்பு ஆகி, கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி, நிலம் தன் மேல் வந்தருளி, நீள் கழல்கள் காட்டி, நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு, | [12] |
தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே! மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே! தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே! பாசம் ஆம் பற்று அறுத்து, பாரிக்கும் ஆரியனே! நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட, | [13] |
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே! ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே! ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே! நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே! இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! | [14] |
அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையும் ஆம் சோதியனே! துன் இருளே! தோன்றாப் பெருமையனே! ஆதியனே! அந்தம், நடு, ஆகி, அல்லானே! ஈர்த்து என்னை, ஆட்கொண்ட எந்தை பெருமானே! கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின் | [15] |
நோக்கு அரிய நோக்கே! நுணுக்கு அரிய நுண் உணர்வே! போக்கும், வரவும், புணர்வும், இலாப் புண்ணியனே! காக்கும் எம் காவலனே! காண்பு அரிய பேர் ஒளியே! ஆற்று இன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய்! நின்ற தோற்றச் சுடர் ஒளி ஆய், சொல்லாத நுண் உணர்வு ஆய், | [16] |
மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து, அறிவு ஆம் தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள் ஊற்று ஆன உண் ஆர் அமுதே! உடையானே! வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப ஆற்றேன்; எம் ஐயா, அரனே! ஓ! என்று என்று | [17] |
போற்றி, புகழ்ந்திருந்து, பொய் கெட்டு, மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து, வினைப் பிறவி சாராமே, கள்ளப் புலக் குரம்பை கட்டழிக்க வல்லானே! நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே! தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே! | [18] |
அல்லல் பிறவி அறுப்பானே! ஓ!' என்று, சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக் கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ், பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95) திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி! | [19] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8.105.01  
திருச்சதகம் - I மெய்யுணர்தல் (1-10) மெய்தான் அரும்பி
பண் - அயிகிரி நந்தினி (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கட்டளைக்கலித்துறை
மெய் தான் அரும்பி, விதிர்விதிர்த்து, உன் விரை ஆர் கழற்கு, என் கை தான் தலை வைத்து, கண்ணீர் ததும்பி, வெதும்பி, உள்ளம் பொய் தான் தவிர்ந்து, உன்னை, போற்றி, சய, சய, போற்றி!' என்னும் கை தான் நெகிழவிடேன்; உடையாய்! என்னைக் கண்டுகொள்ளே. | [1] |
கொள்ளேன் புரந்தரன், மால், அயன் வாழ்வு; குடி கெடினும், நள்ளேன் நினது அடியாரொடு அல்லால்; நரகம் புகினும், எள்ளேன் திரு அருளாலே இருக்கப் பெறின்; இறைவா! உள்ளேன் பிற தெய்வம், உன்னை அல்லாது; எங்கள் உத்தமனே! | [2] |
உத்தமன், அத்தன், உடையான், அடியே நினைந்து உருகி, மத்த மனத்தொடு, மால் இவன்' என்ன, மன நினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட, ஊர் ஊர் திரிந்து, எவரும் தம் தம் மனத்தன பேச, எஞ்ஞான்று கொல் சாவதுவே? | [3] |
சாவ, முன் நாள், தக்கன் வேள்வித் தகர் தின்று, நஞ்சம் அஞ்சி, ஆவ! எந்தாய்!' என்று, அவிதா இடும் நம்மவர் அவரே, மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி, விண் ஆண்டு, மண்மேல் தேவர் என்றே இறுமாந்து, என்ன பாவம் திரிதவரே! | [4] |
தவமே புரிந்திலன்; தண் மலர் இட்டு, முட்டாது இறைஞ்சேன்; அவமே பிறந்த அரு வினையேன், உனக்கு அன்பர் உள் ஆம் சிவமே பெறும் திரு எய்திற்றிலேன்; நின் திருவடிக்கு ஆம் பவமே அருளு கண்டாய் அடியேற்கு; எம் பரம்பரனே! | [5] |
பரந்து பல் ஆய் மலர் இட்டு, முட்டாது, அடியே இறைஞ்சி, இரந்த எல்லாம் எமக்கே பெறலாம்' என்னும், அன்பர் உள்ளம் கரந்து நில்லாக் கள்வனே! நின் தன் வார் கழற்கு அன்பு, எனக்கும் நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே. | [6] |
முழுவதும் கண்டவனைப் படைத்தான், முடி சாய்த்து, முன்நாள், செழு மலர் கொண்டு எங்கும் தேட, அப்பாலன்; இப்பால், எம்பிரான் கழுதொடு காட்டிடை நாடகம் ஆடி, கதி இலியாய், உழுவையின் தோல் உடுத்து, உன்மத்தம் மேல்கொண்டு, உழிதருமே. | [7] |
உழிதரு காலும், கனலும், புனலொடு, மண்ணும், விண்ணும், இழிதரு காலம், எக் காலம் வருவது? வந்ததன் பின், உழிதரு கால், அத்த! உன் அடியேன் செய்த வல் வினையைக் கழிதரு காலமும் ஆய், அவை காத்து, எம்மைக் காப்பவனே! | [8] |
பவன், எம்பிரான், பனி மா மதிக் கண்ணி, விண்ணோர் பெருமான், சிவன், எம்பிரான், என்னை ஆண்டுகொண்டான், என் சிறுமை கண்டும்; அவன் எம்பிரான் என்ன, நான் அடியேன் என்ன, இப் பரிசே புவன், எம்பிரான்! தெரியும் பரிசு ஆவது இயம்புகவே. | [9] |
புகவே தகேன் உனக்கு அன்பருள், யான்; என் பொல்லா மணியே! தகவே, எனை உனக்கு ஆட்கொண்ட தன்மை? எப் புன்மையரை மிகவே உயர்த்தி, விண்ணோரைப் பணித்தி; அண்ணா! அமுதே! நகவே தகும் எம்பிரான்! என்னை நீ செய்த நாடகமே. | [10] |
நாடகத்தால் உன் அடியார்போல் நடித்து, நான் நடுவே வீடு அகத்தே புகுந்திடுவான், மிகப் பெரிதும் விரைகின்றேன்; ஆடகச் சீர் மணிக் குன்றே! இடை அறா அன்பு உனக்கும் என் ஊடு அகத்தே நின்று, உருகத் தந்தருள்; எம் உடையானே! | [11] |
யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்; இறப்பு அதனுக்கு என் கடவேன்? வானேயும் பெறில் வேண்டேன்; மண் ஆள்வான் மதித்தும் இரேன்; தேன் ஏயும் மலர்க் கொன்றைச் சிவனே! எம்பெருமான்! எம் மானே! உன் அருள் பெறும் நாள் என்று?' என்றே வருந்துவனே. | [12] |
வருந்துவன், நின் மலர்ப் பாதம் அவை காண்பான்; நாய் அடியேன் இருந்து நல மலர் புனையேன்; ஏத்தேன் நாத் தழும்பு ஏற; பொருந்திய பொன் சிலை குனித்தாய்! அருள் அமுதம் புரியாயேல், வருந்துவன் அத் தமியேன்; மற்று என்னே நான் ஆம் ஆறே? | [13] |
ஆம் ஆறு, உன் திருவடிக்கே அகம் குழையேன்; அன்பு உருகேன்; பூமாலை புனைந்து ஏத்தேன்; புகழ்ந்து உரையேன்; புத்தேளிர் கோமான்! நின் திருக்கோயில் தூகேன், மெழுகேன், கூத்து ஆடேன், சாம் ஆறே விரைகின்றேன் சதிராலே சார்வானே. | [14] |
வான் ஆகி, மண் ஆகி, வளி ஆகி, ஒளி ஆகி, ஊன் ஆகி, உயிர் ஆகி, உண்மையும் ஆய், இன்மையும் ஆய், கோன் ஆகி, யான், எனது என்று அவர்அவரைக் கூத்தாட்டு வான் ஆகி, நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே! | [15] |
வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்; மனம் நின்பால் தாழ்த்துவதும், தாம் உயர்ந்து, தம்மை எல்லாம் தொழவேண்டி; சூழ்த்து மதுகரம் முரலும் தாரோயை, நாய் அடியேன், பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான், யானும் உன்னைப் பரவுவனே. | [16] |
பரவுவார் இமையோர்கள்; பாடுவன நால்வேதம்; குரவு வார் குழல் மடவாள் கூறு உடையாள், ஒரு பாகம்; விரவுவார் மெய் அன்பின் அடியார்கள், மேன்மேல்; உன் அரவு வார் கழல் இணைகள் காண்பாரோ, அரியானே? | [17] |
அரியானே யாவர்க்கும்! அம்பரவா! அம்பலத்து எம் பெரியானே! சிறியேனை ஆட்கொண்ட பெய் கழல்கீழ் விரை ஆர்ந்த மலர் தூவேன்; வியந்து அலறேன்; நயந்து உருகேன்; தரியேன்; நான் ஆம் ஆறு என்? சாவேன்; நான் சாவேனே! | [18] |
வேனில் வேள் மலர்க் கணைக்கும், வெள் நகை, செவ் வாய், கரிய பானல் ஆர் கண்ணியர்க்கும், பதைத்து உருகும் பாழ் நெஞ்சே! ஊன் எலாம் நின்று உருக, புகுந்து ஆண்டான்; இன்று போய் வான் உளான்; காணாய் நீ, மாளா வாழ்கின்றாயே. | [19] |
வாழ்கின்றாய்; வாழாத நெஞ்சமே! வல் வினைப் பட்டு ஆழ்கின்றாய்; ஆழாமல் காப்பானை ஏத்தாதே, சூழ்கின்றாய் கேடு உனக்கு; சொல்கின்றேன், பல்காலும்; வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே. | [20] |
வெள்ளம் தாழ் விரி சடையாய்! விடையாய்!விண்ணோர் பெருமானே!' எனக் கேட்டு வேட்ட நெஞ்சாய், பள்ளம் தாழ் உறு புனலில், கீழ் மேலாக, பதைத்து உருகும் அவர் நிற்க, என்னைஆண்டாய்க்கு, உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் உருகாதால்; உடம்பு எல்லாம் கண்ணாய், அண்ணா! வெள்ளம் தான் பாயாதால்; நெஞ்சம் கல் ஆம்; கண் இணையும் மரம் ஆம் தீவினையினேற்கே. | [21] |
வினையிலே கிடந்தேனை, புகுந்து நின்று, போது, நான் வினைக்கேடன்' என்பாய் போல, இனையன் நான்' என்று உன்னை அறிவித்து, என்னை ஆட்கொண்டு, எம்பிரான் ஆனாய்க்கு,இரும்பின் பாவை அனைய நான், பாடேன்; நின்று ஆடேன்; அந்தோ! அலறிடேன்; உலறிடேன்; ஆவி சோரேன்; முனைவனே! முறையோ, நான் ஆன ஆறு? முடிவு அறியேன்; முதல், அந்தம், ஆயினானே! | [22] |
ஆய நான்மறையவனும் நீயே ஆதல் அறிந்து, யான் யாவரினும் கடையன் ஆய நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும், நாதனே! நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன் ஆயினேன்; ஆதலால், ஆண்டுகொண்டாய் அடியார் தாம் இல்லையே? அன்றி, மற்று ஓர் பேயனேன்? இது தான் நின் பெருமை அன்றே! எம்பெருமான்! என் சொல்லிப் பேசுகேனே? | [23] |
பேசில், தாம் ஈசனே, எந்தாய், எந்தை பெருமானே!' என்று என்றே பேசிப் பேசி; பூசின், தாம் திருநீறே நிறையப் பூசி; போற்றி எம்பெருமானே!' என்று; பின்றா நேசத்தால் பிறப்பு இறப்பைக் கடந்தார் தம்மை ஆண்டானே! அவா வெள்ளக் கள்வனேனை, மாசு அற்ற மணிக் குன்றே! எந்தாய்! அந்தோ! என்னை, நீ ஆட்கொண்ட வண்ணம் தானே? | [24] |
வண்ணம் தான் சேயது அன்று; வெளிதே அன்று; அநேகன்; ஏகன்; அணு; அணுவில் இறந்தாய்;என்று அங்கு எண்ணம் தான் தடுமாறி, இமையோர் கூட்டம் எய்தும் ஆறு அறியாத எந்தாய்! உன் தன் வண்ணம் தான் அது காட்டி, வடிவு காட்டி, மலர்க் கழல்கள் அவை காட்டி, வழிஅற்றேனை, திண்ணம் தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய்; எம்பெருமான்! என் சொல்லிச் சிந்திக்கேனே? | [25] |
சிந்தனை நின் தனக்கு ஆக்கி, நாயினேன் தன் கண் இணை நின் திருப்பாதப் போதுக்குஆக்கி, வந்தனையும் அம் மலர்க்கே ஆக்கி, வாக்கு, உன் மணி வார்த்தைக்கு ஆக்கி, ஐம்புலன்கள் ஆர வந்து, எனை ஆட்கொண்டு, உள்ளே புகுந்த விச்சை மால் அமுதப் பெரும் கடலே!மலையே! உன்னைத் தந்தனை செம் தாமரைக் காடு அனைய மேனித் தனிச் சுடரே! இரண்டும் இல் இத்தனியனேற்கே. | [26] |
தனியனேன், பெரும் பிறவிப் பௌவத்து, எவ்வம் தடம் திரையால் எற்றுண்டு, பற்றுஒன்று இன்றி, கனியின் நேர் துவர் வாயார் என்னும் காலால் கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு, இனி, என்னே உய்யும் ஆறு?' என்று என்று எண்ணி, அஞ்சு எழுத்தின் புணை பிடித்துக்கிடக்கின்றேனை, முனைவனே! முதல், அந்தம், இல்லா மல்லல் கரை காட்டி, ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே. | [27] |
கேட்டு ஆரும் அறியாதான்; கேடு ஒன்று இல்லான்; கிளை இலான்; கேளாதே எல்லாம் கேட்டான் நாட்டார்கள் விழித்திருப்ப, ஞாலத்துள்ளே நாயினுக்குத் தவிசு இட்டு, நாயினேற்கே காட்டாதன எல்லாம் காட்டி, பின்னும் கேளாதன எல்லாம் கேட்பித்து, என்னை மீட்டேயும் பிறவாமல் காத்து, ஆட்கொண்டான் எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே! | [28] |
விச்சை தான் இது ஒப்பது உண்டோ? கேட்கின் மிகு காதல் அடியார் தம் அடியன் ஆக்கி அச்சம் தீர்த்து ஆட்கொண்டான்; அமுதம் ஊறி, அகம் நெகவே புகுந்து, ஆண்டான், அன்புகூர; அச்சன், ஆண், பெண், அலி, ஆகாசம், ஆகி, ஆர் அழல் ஆய், அந்தம் ஆய், அப்பால் நின்ற செச்சை மா மலர் புரையும் மேனி, எங்கள் சிவபெருமான், எம்பெருமான், தேவர் கோவே! | [29] |
தேவர் கோ அறியாத தேவ தேவன்; செழும் பொழில்கள் பயந்து, காத்து, அழிக்கும்மற்றை மூவர் கோனாய் நின்ற முதல்வன்; மூர்த்தி; மூதாதை; மாது ஆளும் பாகத்து எந்தை; யாவர் கோன்; என்னையும் வந்து ஆண்டுகொண்டான்; யாம் ஆர்க்கும் குடி அல்லோம்; யாதும்அஞ்சோம்; மேவினோம் அவன் அடியார் அடியாரோடு; மேன் மேலும் குடைந்து ஆடி, ஆடுவோமே. | [30] |
ஆடுகின்றிலை; கூத்துஉடையான் கழற்கு அன்பு இலை; என்பு உருகிப் பாடுகின்றிலை; பதைப்பதும் செய்கிலை; பணிகிலை; பாத மலர் சூடுகின்றிலை; சூட்டுகின்றதும் இலை; துணை இலி பிண நெஞ்சே! தேடுகின்றிலை; தெருவுதோறு அலறிலை; செய்வது ஒன்று அறியேனே. | [31] |
அறிவு இலாத எனை, புகுந்து ஆண்டுகொண்டு அறிவதை அருளி, மெய்ந் நெறி எலாம் புலம் ஆக்கிய எந்தையை, பந்தனை அறுப்பானை, பிறிவு இலாத இன் அருள்கள் பெற்றிருந்தும், மாறு ஆடுதி; பிண நெஞ்சே! கிறி எலாம் மிகக் கீழ்ப்படுத்தாய்; கெடுத்தாய் என்னைக் கெடுமாறே. | [32] |
மாறி நின்று எனைக் கெடக் கிடந்தனையை, எம் மதி இலி மட நெஞ்சே! தேறுகின்றிலம் இனி உனை; சிக்கெனச் சிவன் அவன் திரள் தோள்மேல் நீறு நின்றது கண்டனை; ஆயினும், நெக்கிலை; இக் காயம் கீறுகின்றிலை; கெடுவது உன் பரிசு இது; கேட்கவும் கில்லேனே. | [33] |
கிற்ற வா, மனமே! கெடுவாய்; உடையான் அடி நாயேனை விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரை மலர்த் திருப்பாதம் முற்று இலா இளம் தளிர் பிரிந்து இருந்து நீ உண்டன எல்லாம் முன் அற்ற ஆறும் நின் அறிவும் நின் பெருமையும் அளவு அறுக்கில்லேனே. | [34] |
அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு அடியவர்க்கு எளியான் நம் களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள் கசிந்து உணர்ந்து இருந்தேயும் உள கறுத்து உனை நினைந்து உளம் பெருங்களன் செய்த்தும் இலை நெஞ்சே பளகு அறுத்து உடையான் கழல் பணிந்திலை பரகதி புகுவானே. | [35] |
புகுவது ஆவதும்; போதரவு இல்லதும்; பொன் நகர் புகப் போதற்கு உகுவது ஆவதும்; எந்தை, எம்பிரான், என்னை ஆண்டவன் கழற்கு அன்பு நெகுவது ஆவதும்; நித்தலும் அமுதொடு, தேனொடு, பால், கட்டி, மிகுவது ஆவதும்; இன்று எனின், மற்று இதற்கு என் செய்கேன் வினையேனே? | [36] |
வினை என்போல் உடையார் பிறர் ஆர்? உடையான், அடி நாயேனைத் தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பு அன்று; மற்று அதனாலே, முனைவன் பாத நல் மலர் பிரிந்திருந்தும், நான் முட்டிலேன், தலை கீறேன்; இனையன் பாவனை, இரும்பு; கல், மனம்; செவி, இன்னது என்று அறியேனே. | [37] |
ஏனை யாவரும் எய்திடல் உற்று, மற்று இன்னது என்று அறியாத தேனை, ஆன் நெயை, கரும்பின் இன் தேறலை, சிவனை, என் சிவலோகக் கோனை, மான் அன நோக்கி தன் கூறனை, குறுகிலேன்; நெடும் காலம், ஊனை, யான் இருந்து ஓம்புகின்றேன்; கெடுவேன் உயிர் ஓயாதே. | [38] |
ஓய்வு இலாதன; உவமனில் இறந்தன; ஒள் மலர்த் தாள் தந்து, நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை, நல் நெறி காட்டி, தாயில் ஆகிய இன் அருள் புரிந்த, என் தலைவனை நனி காணேன்; தீயில் வீழ்கிலேன்; திண் வரை உருள்கிலேன்: செழும் கடல் புகுவேனே? | [39] |
வேனில் வேள் கணை கிழித்திட, மதி சுடும்; அது தனை நினையாதே, மான் நிலாவிய நோக்கியர் படிறிடை மத்து இடு தயிர் ஆகி, தேன் நிலாவிய திருஅருள் புரிந்த, என் சிவன் நகர் புகப் போகேன்; ஊனில் ஆவியை ஓம்புதல் பொருட்டு, இனும் உண்டு உடுத்து இருந்தேனே. | [40] |
இரு கை யானையை ஒத்து இருந்து, என் உளக் கருவை யான் கண்டிலேன்; கண்டது எவ்வமே; வருக' என்று பணித்தனை; வான் உளோர்க்கு ஒருவனே! கிற்றிலேன்; கிற்பன், உண்ணவே. | [41] |
உண்டு ஓர் ஒள் பொருள்' என்று உணர்வார்க்கு எலாம் பெண்டிர், ஆண், அலி, என்று அறி ஒண்கிலை; தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய்; கண்டும் கண்டிலேன்: என்ன கண் மாயமே! | [42] |
மேலை வானவரும் அறியாதது ஓர் கோலமே, எனை ஆட்கொண்ட கூத்தனே, ஞாலமே, விசும்பே, இவை வந்து போம் காலமே! உனை என்று கொல் காண்பதே? | [43] |
காணல் ஆம் பரமே, கட்கு இறந்தது ஓர் வாள் நிலாப் பொருளே, இங்கு, ஒர் பார்ப்பு என, பாணனேன் படிற்று ஆக்கையை விட்டு, உனைப் பூணும் ஆறு அறியேன் புலன் போற்றியே. | [44] |
போற்றி' என்றும், புரண்டும், புகழ்ந்தும் நின்று, ஆற்றல் மிக்க அன்பால் அழைக்கின்றிலேன்; ஏற்று வந்து எதிர், தாமரைத் தாள் உறும் கூற்றம் அன்னது ஓர் கொள்கை என் கொள்கையே. | [45] |
கொள்ளும்கில், எனை அன்பரில் கூய்ப் பணி கள்ளும், வண்டும், அறா மலர்க் கொன்றையான்; நள்ளும், கீழ் உளும், மேல் உளும், யா உளும், எள்ளும் எண்ணெயும் போல், நின்ற எந்தையே? | [46] |
எந்தை, யாய், எம்பிரான்; மற்றும் யாவர்க்கும் தந்தை, தாய், தம்பிரான்; தனக்கு அஃது இலான்; முந்தி என்னுள் புகுந்தனன் யாவரும் சிந்தையாலும் அறிவு அரும் செல்வனே. | [47] |
செல்வம், நல்குரவு, இன்றி; விண்ணோர், புழு, புல் வரம்பு இன்றி; யார்க்கும் அரும் பொருள் எல்லை இல் கழல் கண்டும் பிரிந்தனன்: கல் வகை மனத்தேன் பட்ட கட்டமே! | [48] |
கட்டு அறுத்து, எனை ஆண்டு, கண் ஆர, நீறு இட்ட அன்பரொடு, யாவரும் காணவே, பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை எட்டினோடு இரண்டும் அறியேனையே. | [49] |
அறிவனே! அமுதே! அடி நாயினேன் அறிவன் ஆகக் கொண்டோ, எனை ஆண்டதும்? அறிவு இலாமை அன்றே கண்டது, ஆண்ட நாள்? அறிவனோ, அல்லனோ? அருள், ஈசனே! | [50] |
ஈசனே! என் எம்மானே! எந்தை பெருமான்! என் பிறவி நாசனே! நான் யாதும் ஒன்று அல்லாப் பொல்லா நாய் ஆன நீசனேனை ஆண்டாய்க்கு, நினைக்கமாட்டேன் கண்டாயே: தேசனே! அம்பலவனே! செய்வது ஒன்றும் அறியேனே. | [51] |
செய்வது அறியாச் சிறு நாயேன், செம் பொன் பாத மலர் காணாப் பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன்; பொய் இலா மெய்யர் வெறி ஆர் மலர்ப் பாதம் மேவக் கண்டும், கேட்டிருந்தும், பொய்யனேன் நான் உண்டு, உடுத்து, இங்கு இருப்பது ஆனேன்: போர் ஏறே! | [52] |
போர் ஏறே! நின் பொன் நகர்வாய் நீ போந்தருளி, இருள் நீக்கி, வார் ஏறு இள மென் முலையாளோடு உடன் வந்தருள, அருள் பெற்ற சீர் ஏறு அடியார் நின் பாதம் சேரக் கண்டும், கண் கெட்ட ஊர் ஏறு ஆய், இங்கு உழல்வேனோ? கொடியேன் உயிர் தான் உலவாதே! | [53] |
உலவாக் காலம் தவம் எய்தி, உறுப்பும் வெறுத்து, இங்கு உனைக் காண்பான், பல மா முனிவர் நனி வாட, பாவியேனைப் பணி கொண்டாய்; மல மாக் குரம்பை இது மாய்க்க மாட்டேன்; மணியே, உனைக் காண்பான், அலவாநிற்கும் அன்பு இலேன்; என் கொண்டு எழுகேன், எம்மானே? | [54] |
மான் நேர் நோக்கி உமையாள் பங்கா! வந்து இங்கு ஆட்கொண்ட தேனே! அமுதே! கரும்பின் தெளிவே! சிவனே! தென் தில்லைக் கோனே! உன் தன் திருக்குறிப்புக் கூடுவார் நின் கழல் கூட, ஊன் ஆர் புழுக்கூடு இது காத்து, இங்கு இருப்பது ஆனேன்; உடையானே! | [55] |
உடையானே! நின் தனை உள்கி, உள்ளம் உருகும், பெரும் காதல் உடையார், உடையாய்! நின் பாதம் சேரக் கண்டு, இங்கு ஊர் நாயின் கடை ஆனேன், நெஞ்சு உருகாதேன், கல்லா மனத்தேன், கசியாதேன், முடை ஆர் புழுக் கூடு இது காத்து, இங்கு இருப்பது ஆக முடித்தாயே. | [56] |
முடித்த ஆறும், என் தனக்கே தக்கதே; முன், அடியாரைப் பிடித்த ஆறும், சோராமல் சோரனேன் இங்கு, ஒருத்தி வாய் துடித்த ஆறும், துகில் இறையே சோர்ந்த ஆறும், முகம் குறு வேர் பொடித்த ஆறும், இவை உணர்ந்து, கேடு என் தனக்கே சூழ்ந்தேனே. | [57] |
தேனை, பாலை, கன்னலின் தெளியை, ஒளியை, தெளிந்தார் தம் ஊனை உருக்கும் உடையானை, உம்பரானை, வம்பனேன், நான் நின் அடியேன்; நீ என்னை ஆண்டாய்,' என்றால், அடியேற்குத் தானும் சிரித்தே, அருளலாம் தன்மை ஆம், என் தன்மையே. | [58] |
தன்மை பிறரால் அறியாத தலைவா! பொல்லா நாய் ஆன புன்மையேனை ஆண்டு, ஐயா! புறமே போக விடுவாயோ? என்னை நோக்குவார் யாரே? என் நான் செய்கேன்? எம்பெருமான்! பொன்னே திகழும் திருமேனி எந்தாய்! எங்குப் புகுவேனே? | [59] |
புகுவேன், எனதே நின் பாதம்; போற்றும் அடியார் உள் நின்று நகுவேன், பண்டு தோள் நோக்கி நாணம் இல்லா நாயினேன். நெகும் அன்பு இல்லை, நினைக் காண; நீ ஆண்டு அருள, அடியேனும் தகுவனே? என் தன்மையே! எந்தாய், அந்தோ! தரியேனே! | [60] |
தரிக்கிலேன் காய வாழ்க்கை; சங்கரா, போற்றி! வான விருத்தனே, போற்றி! எங்கள் விடலையே, போற்றி! ஒப்பு இல் ஒருத்தனே, போற்றி! உம்பர் தம்பிரான், போற்றி! தில்லை நிருத்தனே, போற்றி! எங்கள் நின்மலா, போற்றி! போற்றி! | [61] |
போற்றி! ஓம் நமச்சிவாய! புயங்கனே, மயங்குகின்றேன்; போற்றி! ஓம் நமச்சிவாய! புகல் இடம் பிறிது ஒன்று இல்லை; போற்றி! ஓம் நமச்சிவாய! புறம் எனைப் போக்கல், கண்டாய்; போற்றி! ஓம் நமச்சிவாய! சய! சய! போற்றி! போற்றி! | [62] |
போற்றி! என் போலும் பொய்யர் தம்மை ஆட்கொள்ளும் வள்ளல் போற்றி! நின் பாதம் போற்றி! நாதனே, போற்றி! போற்றி! போற்றி! நின் கருணை வெள்ளப் புது மது; புவனம், நீர், தீ, காற்று, இயமானன், வானம், இரு சுடர், கடவுளானே! | [63] |
கடவுளே போற்றி! என்னைக் கண்டுகொண்டு, அருளு, போற்றி! விட, உளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும், போற்றி! உடல் இது களைந்திட்டு, ஒல்லை உம்பர் தந்து அருளு, போற்றி! சடையுளே கங்கை வைத்த சங்கரா, போற்றி! போற்றி! | [64] |
சங்கரா, போற்றி! மற்று ஓர் சரண் இலேன்; போற்றி! கோலப் பொங்கு அரா அல்குல், செவ் வாய், வெள் நகை, கரிய வாள் கண், மங்கை ஓர் பங்க, போற்றி! மால் விடை ஊர்தி, போற்றி! இங்கு, இவ் வாழ்வு ஆற்றகில்லேன்; எம்பிரான்! இழித்திட்டேனே. | [65] |
இழித்தனன் என்னை யானே; எம்பிரான், போற்றி! போற்றி! பழித்திலேன் உன்னை; என்னை ஆளுடைப் பாதம் போற்றி! பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை; போற்றி! ஒழித்திடு இவ் வாழ்வு; போற்றி! உம்பர் நாட்டு எம்பிரானே! | [66] |
எம்பிரான், போற்றி! வானத்தவர் அவர் ஏறு, போற்றி! கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற, வெள் நீற, போற்றி! செம் பிரான், போற்றி! தில்லைத் திருச்சிற்றம்பலவ, போற்றி! உம்பராய், போற்றி! என்னை ஆளுடை ஒருவ, போற்றி! | [67] |
ஒருவனே போற்றி! ஒப்பு இல் அப்பனே, போற்றி! வானோர் குருவனே, போற்றி! எங்கள் கோமளக் கொழுந்து, போற்றி! வருக' என்று, என்னை நின்பால் வாங்கிட வேண்டும், போற்றி! தருக நின் பாதம், போற்றி! தமியனேன் தனிமை தீர்த்தே. | [68] |
தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப, போற்றி! பேர்ந்தும், என் பொய்ம்மை ஆட்கொண்டு அருளிடும் பெருமை, போற்றி! வார்ந்த நஞ்சு அயின்று, வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல், போற்றி! ஆர்ந்த நின் பாதம், நாயேற்கு அருளிட வேண்டும், போற்றி! | [69] |
போற்றி! இப் புவனம், நீர், தீ, காலொடு, வானம் ஆனாய்; போற்றி! எவ் உயிர்க்கும் தோற்றம் ஆகி, நீ, தோற்றம் இல்லாய்; போற்றி! எல்லா உயிர்க்கும் ஈறு ஆய், ஈறு இன்மை ஆனாய்; போற்றி! ஐம் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கையானே. | [70] |
புணர்ப்ப தொக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய் புணர்ப்ப தன்றி தென்ற போது நின்னொ டென்னொ டென்னிதாம் புணர்ப்ப தாக அன்றி தாக அன்பு நின் கழல் கணே புணர்ப்ப தாக அம் கணாள புங்கம் ஆன போகமே | [71] |
போகம் வேண்டி வேண்டி லேன் புரந்த ராதி இன்பமும் ஏக நின் கழல் இணை யலா திலேன் என் எம்பிரான் ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலிக் கணே ஆக என் கை கண்கள் தாரை ஆற தாக ஐயனே | [72] |
ஐய நின்ன தல்ல தில்லை மற்றோர் பற்று வஞ்சனேன் பொய் கலந்த தல்ல தில்லை பொய்மை யேன்என் எம்பிரான் மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல் கணே மெய் கலந்த அன்பர் அன்பெ னக்கும் ஆக வேண்டுமே | [73] |
வேண்டும் நின்கழல் கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்ம்மையே ஆண்டு கொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ பூண்டு கொண்டு அடியனேனும் போற்றி போற்றி என்றும்என்றும் மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன நின் வணங்கவே | [74] |
வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலமிட்டு உணங்கும் நின்னை எய்த லுற்று மற்றோர் உண்மை இன்மையின் வணங்கி யாம் விடேங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு இணங்கு கொங்கை மங்கை பங்க என்கொலோ நினைப்பதே | [75] |
நினைப்ப தாக சிந்தை செல்லும் எல்லை ஏய வாக்கினால் தினைத்தனையும் ஆவ தில்லை சொல்லல் ஆவ கேட்பவே அனைத் துலகும் ஆய நின்னை ஐம் புலன்கள் காண்கிலா எனைத்எனைத்த தெப் புறத்த தெந்தை பாதம் எய்தவே? | [76] |
எய்தல் ஆவ தென்று நின்னை எம்பிரான் இவ் வஞ்சனேற்கு உய்தல் ஆவது உன்கண் அன்றி மற்றோர் உண்மை இன்மையின் பைதல் ஆவ தென்று பாது காத் திரங்கு பாவியேற்கு இஃது அலாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ஈசனே | [77] |
ஈசனே நீ அல்ல தில்லை இங்கும் அங்கும் என்பதும் பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என்எம்பிரான் நீசனேனை ஆண்டு கொண்ட நின் மலா ஒர் நின்அலால் தேசனே ஓர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே. | [78] |
சிந்தை செய்கை கேள்வி வாக்கு சீரில் ஐம் புலன்களால் முந்தை ஆன காலம் நின்னை எய்தி டாத மூர்க்கனேன் வெந்தையா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன் எந்தை ஆய நின்னை இன்னம் எய்தல் உற் றிருப்பனே. | [79] |
இருப்பு நெஞ்ச வஞ்சனேனை ஆண்டு கொண்ட நின்ன தாள் கருப்பு மட்டு வாய் மடுத் தெனைக் கலந்து போகவும் நெருப்பும் உண்டு யானும் உண்டி ருந்த துண்ட தாயினும் விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்ப தென்ன விச்சையே | [80] |
விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று, இங்கு எனை வைத்தாய்; இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து, உன் தாள் சேர்ந்தார்; அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன்; ஆரூர் எம் பிச்சைத் தேவா, என் நான் செய்கேன்? பேசாயே. | [81] |
பேசப்பட்டேன் நின் அடியாரில்; திருநீறே பூசப்பட்டேன்; பூதலரால், உன் அடியான் என்று, ஏசப்பட்டேன்; இனிப் படுகின்றது அமையாதால்; ஆசைப்பட்டேன்; ஆட்பட்டேன்; உன் அடியேனே. | [82] |
அடியேன் அல்லேன் கொல்லோ? தான், எனை ஆட்கொண்டிலை கொல்லோ? அடியார் ஆனார் எல்லாரும் வந்து, உன் தாள் சேர்ந்தார்; செடி சேர் உடலம் இது, நீக்க மாட்டேன்; எங்கள் சிவலோகா! கடியேன் உன்னை, கண் ஆரக் காணும் ஆறு, காணேனே. | [83] |
காணும் ஆறு காணேன்; உன்னை அந் நாள் கண்டேனும் பாணே பேசி, என் தன்னைப் படுத்தது என்ன? பரஞ்சோதி! ஆணே, பெண்ணே, ஆர் அமுதே, அத்தா, செத்தே போயினேன்; ஏண் நாண் இல்லா நாயினேன், என் கொண்டு எழுகேன், எம்மானே? | [84] |
மான் நேர் நோக்கி, உமையாள் பங்கா, மறை ஈறு அறியா மறையோனே, தேனே, அமுதே, சிந்தைக்கு அரியாய், சிறியேன் பிழை பொறுக்கும் கோனே, சிறிது என் கொடுமை பறைந்தேன்; சிவ மா நகர் குறுகப் போனார் அடியார்; யானும், பொய்யும், புறமே போந்தோமே. | [85] |
புறமே போந்தோம் பொய்யும், யானும்; மெய் அன்பு பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான். அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார்; சிறவே செய்து வழுவாது, சிவனே! நின் தாள் சேர்ந்தாரே. | [86] |
தாராய், உடையாய்! அடியேற்கு உன் தாள் இணை அன்பு; போரா உலகம் புக்கார் அடியார்; புறமே போந்தேன் யான்; ஊர் ஆ மிலைக்க, குருட்டு ஆ மிலைத்தாங்கு, உன் தாள் இணை அன்புக்கு ஆரா அடியேன், அயலே மயல்கொண்டு, அழுகேனே. | [87] |
அழுகேன், நின்பால் அன்பு ஆம் மனம் ஆய்; அழல் சேர்ந்த மெழுகே அன்னார், மின் ஆர், பொன் ஆர், கழல் கண்டு தொழுதே, உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடராதே, பழுதே பிறந்தேன்; என் கொண்டு உன்னைப் பணிகேனே? | [88] |
பணிவார் பிணி தீர்த்தருளி, பழைய அடியார்க்கு உன் அணி ஆர் பாதம் கொடுத்தி; அதுவும் அரிது என்றால், திணி ஆர் மூங்கில் அனையேன், வினையைப் பொடி ஆக்கி, தணி ஆர் பாதம், வந்து, ஒல்லை தாராய்; பொய் தீர் மெய்யானே! | [89] |
யானே பொய்; என் நெஞ்சும் பொய்; என் அன்பும் பொய்; ஆனால், வினையேன் அழுதால், உன்னைப் பெறலாமே? தேனே, அமுதே, கரும்பின் தெளிவே, தித்திக்கும் மானே, அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே. | [90] |
மாறு இலாத மாக் கருணை வெள்ளமே! வந்து முந்தி நின் மலர்கொள் தாள் இணை, வேறு இலாப் பதப் பரிசு பெற்ற, நின் மெய்ம்மை அன்பர், உன் மெய்ம்மை மேவினார்; ஈறு இலாத நீ, எளியை ஆகி வந்து, ஒளிசெய் மானிடம் ஆக, நோக்கியும், கீறு இலாத நெஞ்சு உடைய நாயினேன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே. | [91] |
மை இலங்கு நல் கண்ணி பங்கனே! வந்து எனைப் பணிகொண்ட பின், மழக் கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால், அரியை என்று உனைக் கருதுகின்றிலேன்; மெய் இலங்கு வெள் நீற்று மேனியாய், மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்; பொய்யில் இங்கு எனைப் புகுதவிட்டு, நீ போவதோ? சொலாய், பொருத்தம் ஆவதே? | [92] |
பொருத்தம் இன்மையேன்; பொய்ம்மை உண்மையேன்; போத' என்று எனைப் புரிந்து நோக்கவும், வருத்தம் இன்மையேன்; வஞ்சம் உண்மையேன்; மாண்டிலேன்; மலர்க் கமல பாதனே, அரத்த மேனியாய், அருள்செய் அன்பரும், நீயும், அங்கு எழுந்தருளி, இங்கு எனை இருத்தினாய்; முறையோ? என் எம்பிரான், வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே? | [93] |
இல்லை நின் கழற்கு அன்பு அது, என்கணே; ஏலம் ஏலும் நல் குழலி பங்கனே! கல்லை மென் கனி ஆக்கும் விச்சை கொண்டு, என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய்; எல்லை இல்லை நின் கருணை; எம்பிரான்! ஏது கொண்டு, நான் ஏது செய்யினும், வல்லையே எனக்கு இன்னும் உன் கழல் காட்டி, மீட்கவும், மறு இல் வானனே? | [94] |
வான நாடரும் அறி ஒணாத நீ, மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ, ஏனை நாடரும் தெரி ஒணாத நீ, என்னை இன்னிதாய் ஆண்டுகொண்டவா, ஊனை நாடகம் ஆடுவித்தவா, உருகி, நான் உனைப் பருக வைத்தவா, ஞான நாடகம் ஆடுவித்தவா நைய வையகத்துடைய விச்சையே! | [95] |
விச்சு அது இன்றியே, விளைவு செய்குவாய்; விண்ணும், மண்ணகம் முழுதும், யாவையும், வைச்சு வாங்குவாய்; வஞ்சகப் பெரும் புலையனேனை, உன் கோயில் வாயிலில் பிச்சன் ஆக்கினாய்; பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய்; தாம் வளர்த்தது, ஓர் நச்சு மா மரம் ஆயினும், கொலார்; நானும் அங்ஙனே, உடைய நாதனே! | [96] |
உடைய நாதனே, போற்றி! நின் அலால் பற்று, மற்று எனக்கு ஆவது ஒன்று இனி உடையனோ? பணி; போற்றி! உம்பரார் தம் பரா பரா, போற்றி! யாரினும் கடையன் ஆயினேன்; போற்றி! என் பெரும் கருணையாளனே, போற்றி! என்னை, நின் அடியன் ஆக்கினாய்; போற்றி! ஆதியும், அந்தம், ஆயினாய், போற்றி! அப்பனே! | [97] |
அப்பனே, எனக்கு அமுதனே, ஆனந்தனே, அகம் நெக அள்ளூறு தேன் ஒப்பனே, உனக்கு உரிய அன்பரில் உரியனாய், உனைப் பருக நின்றது ஓர் துப்பனே, சுடர் முடியனே, துணையாளனே, தொழும்பாளர் எய்ப்பினில் வைப்பனே, எனை வைப்பதோ, சொலாய் நைய, வையகத்து, எங்கள் மன்னனே? | [98] |
மன்ன, எம்பிரான், வருக' என் எனை; மாலும், நான்முகத்து ஒருவன், யாரினும் முன்ன, எம்பிரான், வருக' என் எனை; முழுதும் யாவையும் இறுதி உற்ற நாள் பின்ன, எம்பிரான், வருக' என் எனை; பெய்கழற்கண் அன்பாய், என் நாவினால் பன்ன, எம்பிரான், வருக' என் எனை பாவநாச, நின் சீர்கள் பாடவே. | [99] |
பாட வேண்டும் நான்; போற்றி! நின்னையே பாடி, நைந்து நைந்து உருகி, நெக்கு நெக்கு, ஆட வேண்டும் நான்; போற்றி! அம்பலத்து ஆடும் நின் கழல் போது, நாயினேன் கூட வேண்டும் நான்; போற்றி! இப் புழுக் கூடு நீக்கு எனை; போற்றி! பொய் எலாம் வீட வேண்டும் நான்; போற்றி! வீடு தந்து அருளு; போற்றி! நின் மெய்யர் மெய்யனே! திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி! | [100] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8.120  
திருப்பள்ளியெழுச்சி - போற்றியென் வாழ்முத
பண் - புறநீர்மை (பூபாளம்) (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
எண்சீர் விருத்தம்
போற்றி! என் வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது; பூம் கழற்கு இணை துணைமலர் கொண்டு ஏற்றி, நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கண்டு, நின் திருவடிதொழுகோம் சேற்று இதழ்க் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே! ஏற்று உயர் கொடி உடையாய்! எமை உடையாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! | [1] |
அருணன், இந்திரன் திசை அணுகினன்; இருள் போய் அகன்றது; உதயம் நின் மலர்த்திருமுகத்தின் கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடி மலர் மலர, மற்று அண்ணல் அம்கண் ஆம் திரள் நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே! அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே! அலை கடலே! பள்ளி எழுந்தருளாயே! | [2] |
கூவின பூம் குயில்; கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்; ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு, நமக்கு. தேவ! நல் செறி கழல் தாள் இணை காட்டாய்! திருப்பெருந்துறை உறை சிவபெருமானே! யாவரும் அறிவு அரியாய்! எமக்கு எளியாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! | [3] |
இன் இசை வீணையர், யாழினர், ஒருபால்; இருக்கொடு தோத்திரம் இயம்பினர், ஒருபால்; துன்னிய பிணை மலர்க் கையினர், ஒருபால்; தொழுகையர், அழுகையர்,துவள்கையர், ஒருபால்; சென்னியில் அஞ்சலி கூப்பினர், ஒருபால். திருப்பெருந்துறை உறை சிவபெருமானே! என்னையும் ஆண்டுகொண்டு, இன் அருள் புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! | [4] |
பூதங்கள்தோறும் நின்றாய்' எனின், அல்லால், போக்கு இலன், வரவு இலன்,' என,நினைப் புலவோர் கீதங்கள் பாடுதல், ஆடுதல், அல்லால், கேட்டு அறியோம், உனைக் கண்டு அறிவாரை. சீதம் கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா! சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து, ஏதங்கள் அறுத்து, எம்மை ஆண்டு, அருள்புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! | [5] |
பப்பு அற வீட்டு இருந்து உணரும் நின் அடியார், பந்தனை வந்து அறுத்தார்; அவர்பலரும், மைப்பு உறு கண்ணியர், மானிடத்து இயல்பின் வணங்குகின்றார். அணங்கின் மணவாளா! செப்பு உறு கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே! இப் பிறப்பு அறுத்து, எமை ஆண்டு, அருள்புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! | [6] |
அது, பழச் சுவை என, அமுது என; அறிதற்கு அரிது என, எளிது என; அமரரும்அறியார். இது அவன் திருஉரு; இவன், அவன்; எனவே எங்களை ஆண்டுகொண்டு, இங்கு எழுந்தருளும், மது வளர் பொழில் திரு உத்தரகோச மங்கை உள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா! எது எமைப் பணி கொளும் ஆறு? அது கேட்போம்: எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! | [7] |
முந்திய முதல், நடு, இறுதியும், ஆனாய்; மூவரும் அறிகிலர்; யாவர் மற்றுஅறிவார்? பந்து அணை விரலியும், நீயும், நின் அடியார் பழம் குடில்தொறும் எழுந்தருளியபரனே! செம் தழல் புரை திருமேனியும் காட்டி, திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி, அந்தணன் ஆவதும் காட்டி, வந்து ஆண்டாய்! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே! | [8] |
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே! உன் தொழுப்பு அடியோங்கள், மண்ணகத்தே வந்து, வாழச் செய்தானே! வண் திருப்பெருந்துறையாய்! வழி அடியோம் கண் அகத்தே நின்று, களிதரு தேனே! கடல் அமுதே! கரும்பே! விரும்பு அடியார் எண் அகத்தாய்! உலகுக்கு உயிர் ஆனாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! | [9] |
புவனியில் போய்ப் பிறவாமையின், நாள் நாம் போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி, சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு' என்று நோக்கி, திருப்பெருந்துறை உறைவாய்! திருமால்ஆம் அவன் விருப்பு எய்தவும், மலரவன் ஆசைப் படவும், நின் அலர்ந்த மெய்க்கருணையும், நீயும், அவனியில் புகுந்து, எமை ஆட்கொள்ள வல்லாய்! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே! | [10] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8.123  
செத்திலாப் பத்து - பொய்யனேன் அகம்நெகப்
பண் - ஹரிவராசனம் (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
எண்சீர் விருத்தம்
பொய்யனேன் அகம் நெகப் புகுந்து, அமுது ஊறும், புது மலர்க் கழல் இணை அடிபிரிந்தும், கையனேன், இன்னும் செத்திலேன்; அந்தோ! விழித்திருந்து உள்ளக் கருத்தினை இழந்தேன். ஐயனே! அரசே! அருள் பெரும் கடலே! அத்தனே! அயன், மாற்கு, அறி ஒண்ணாச் செய்ய மேனியனே! செய்வகை அறியேன்; திருப்பெருந்துறை மேவிய சிவனே! | [1] |
புற்றும் ஆய், மரம் ஆய்; புனல், காலே, உண்டி, ஆய்; அண்ட வாணரும், பிறரும், மற்று யாரும், நின் மலர் அடி காணா மன்ன! என்னை ஓர் வார்த்தையுள் படுத்து, பற்றினாய்; பதையேன்; மனம் மிக உருகேன்; பரிகிலேன்; பரியா உடல் தன்னைச் செற்றிலேன்; இன்னும் திரிதருகின்றேன்; திருப்பெருந்துறை மேவிய சிவனே! | [2] |
புலையனேனையும், பொருள் என நினைந்து, உன் அருள் புரிந்தனை; புரிதலும்,களித்துத் தலையினால் நடந்தேன்; விடைப் பாகா! சங்கரா! எண் இல் வானவர்க்கு எல்லாம் நிலையனே! அலை நீர் விடம் உண்ட நித்தனே! அடையார் புரம் எரித்த சிலையனே! எனைச் செத்திடப் பணியாய்; திருப்பெருந்துறை மேவிய சிவனே! | [3] |
அன்பர் ஆகி, மற்று, அரும் தவம் முயல்வார், அயனும், மாலும்; மற்று, அழல் உறுமெழுகு ஆம் என்பர் ஆய், நினைவார் எனைப் பலர்; நிற்க இங்கு, எனை, எற்றினுக்கு ஆண்டாய்? வன் பராய் முருடு ஒக்கும் என் சிந்தை; மரக் கண்; என் செவி இரும்பினும் வலிது; தென் பராய்த்துறையாய்! சிவலோகா! திருப்பெருந்துறை மேவிய சிவனே! | [4] |
ஆட்டுத் தேவர் தம் விதி ஒழித்து, அன்பால், ஐயனே' என்று, உன் அருள் வழி இருப்பேன்; நாட்டுத் தேவரும் நாடு அரும் பொருளே! நாதனே! உனைப் பிரிவு உறா அருளைக் காட்டி, தேவ, நின் கழல் இணை காட்டி, காய மாயத்தைக் கழித்து, அருள்செய்யாய்; சேட்டைத் தேவர் தம் தேவர் பிரானே! திருப்பெருந்துறை மேவிய சிவனே! | [5] |
அறுக்கிலேன் உடல் துணிபட; தீப் புக்கு ஆர்கிலேன்; திருவருள் வகை அறியேன்; பொறுக்கிலேன் உடல்; போக்கு இடம் காணேன்; போற்றி! போற்றி! என் போர் விடைப் பாகா! இறக்கிலேன் உனைப் பிரிந்து; இனிது இருக்க, என் செய்கேன்? இது செய்க' என்றுஅருளாய்; சிறைக்கணே புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே! | [6] |
மாயனே! மறி கடல் விடம் உண்ட வானவா! மணி கண்டத்து எம் அமுதே! நாயினேன், உனை நினையவும் மாட்டேன்; நமச்சிவாய' என்று, உன் அடி பணியாப் பேயன் ஆகிலும், பெரு நெறி காட்டாய்; பிறை குலாம் சடைப் பிஞ்ஞகனே! ஓ! சேயன் ஆகி நின்று, அலறுவது அழகோ? திருப்பெருந்துறை மேவிய சிவனே! | [7] |
போது சேர் அயன், பொரு கடல் கிடந்தோன், புரந்தர ஆதிகள், நிற்க, மற்றுஎன்னைக் கோது மாட்டி, நின் குரை கழல் காட்டி, குறிக்கொள்க' என்று, நின் தொண்டரில்கூட்டாய்; யாது செய்வது, என்று இருந்தனன்; மருந்தே! அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ? சீத வார் புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே! | [8] |
ஞாலம், இந்திரன், நான்முகன், வானோர், நிற்க, மற்று எனை நயந்து, இனிது ஆண்டாய்; காலன் ஆர் உயிர் கொண்ட பூம் கழலாய்! கங்கையாய்! அங்கி தங்கிய கையாய்! மாலும் ஓலம் இட்டு அலறும் அம் மலர்க்கே, மரக்கணேனையும் வந்திடப் பணியாய்; சேலும், நீலமும், நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே! | [9] |
அளித்து வந்து, எனக்கு ஆவ' என்று அருளி, அச்சம் தீர்த்த நின் அருள் பெருங்கடலில், திளைத்தும், தேக்கியும், பருகியும், உருகேன்; திருப்பெருந்துறை மேவிய சிவனே! வளைக் கையானொடு மலரவன் அறியா வானவா! மலை மாது ஒரு பாகா! களிப்பு எலாம் மிகக் கலங்கிடுகின்றேன்; கயிலை மா மலை மேவிய கடலே! | [10] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8.124  
அடைக்கலப் பத்து - செழுக்கமலத் திரளனநின்
பண் - அயிகிரி நந்தினி (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கலவைப்பாட்டு
செழுக் கமலத் திரள் அன, நின் சேவடி சேர்ந்து அமைந்த பழுத்த மனத்து அடியர் உடன் போயினர்; யான், பாவியேன்; புழுக்கண் உடைப் புன் குரம்பை, பொல்லா, கல்வி ஞானம் இலா, அழுக்கு மனத்து அடியேன்; உடையாய்! உன் அடைக்கலமே. | [1] |
வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை, நின் பெருமையினால் பொறுப்பவனே! அராப் பூண்பவனே! பொங்கு கங்கை சடைச் செறுப்பவனே! நின் திருவருளால், என் பிறவியை வேர் அறுப்பவனே! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே. | [2] |
பெரும் பெருமான், என் பிறவியை வேர் அறுத்து, பெரும் பிச்சுத் தரும் பெருமான், சதுரப் பெருமான், என் மனத்தின் உள்ளே வரும் பெருமான், மலரோன், நெடுமால், அறியாமல் நின்ற அரும் பெருமான்! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே. | [3] |
பொழிகின்ற துன்பப் புயல் வெள்ளத்தில், நின் கழல் புணை கொண்டு, இழிகின்ற அன்பர்கள் ஏறினர், வான்; யான், இடர்க் கடல்வாய்ச் சுழி சென்று, மாதர்த் திரை பொர, காமச் சுறவு எறிய, அழிகின்றனன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே. | [4] |
சுருள் புரி கூழையர் சூழலில் பட்டு, உன் திறம் மறந்து, இங்கு, இருள் புரி யாக்கையிலே கிடந்து, எய்த்தனன்; மைத் தடம் கண் வெருள் புரி மான் அன்ன நோக்கி தன் பங்க, விண்ணோர் பெருமான், அருள் புரியாய்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே. | [5] |
மாழை, மைப் பாவிய கண்ணியர் வன் மத்து இட, உடைந்து, தாழியைப் பாவு தயிர் போல், தளர்ந்தேன்; தட மலர்த் தாள், வாழி! எப்போது வந்து, எந் நாள், வணங்குவன் வல் வினையேன்? ஆழி அப்பா! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே. | [6] |
மின் கணினார், நுடங்கும் இடையார், வெகுளி வலையில் அகப்பட்டு, புன் கணன் ஆய், புரள்வேனை, புரளாமல், புகுந்து அருளி, என்கணிலே அமுது ஊறி, தித்தித்து, என் பிழைக்கு இரங்கும் அம் கணனே! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே. | [7] |
மா வடு வகிர் அன்ன கண்ணி பங்கா! நின் மலர் அடிக்கே கூவிடுவாய்? கும்பிக்கே இடுவாய்? நின் குறிப்பு அறியேன்; பா இடை ஆடு குழல் போல், கரந்து, பரந்தது, உள்ளம். ஆ! கெடுவேன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே. | [8] |
பிறிவு அறியா அன்பர், நின் அருள் பெய் கழல் தாள் இணைக் கீழ், மறிவு அறியாச் செல்வம் வந்து பெற்றார்; உன்னை வந்திப்பது ஓர் நெறி அறியேன்; நின்னையே அறியேன்; நின்னையே அறியும் அறிவு அறியேன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே. | [9] |
வழங்குகின்றாய்க்கு உன் அருள் ஆர் அமுதத்தை வாரிக்கொண்டு, விழுங்குகின்றேன்; விக்கினேன் வினையேன், என் விதி இன்மையால்; தழங்கு அரும் தேன் அன்ன தண்ணீர் பருகத் தந்து, உய்யக் கொள்ளாய்; அழுங்குகின்றேன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே. | [10] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8.125  
ஆசைப்பத்து - கருடக்கொடியோன் காணமாட்டாக்
பண் - கருடக்கொடியோன் (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அறுசீர் விருத்தம்
கருளக் கொடியோன் காணமாட்டாக் கழல் சேவடி என்னும் பொருளைத் தந்து, இங்கு, என்னை ஆண்ட பொல்லா மணியே! ஓ! இருளைத் துரந்திட்டு, இங்கே வா' என்று, அங்கே, கூவும் அருளைப் பெறுவான், ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே! | [1] |
மொய்ப்பால் நரம்பு கயிறு ஆக, மூளை, என்பு, தோல், போர்த்த குப்பாயம் புக்கு, இருக்ககில்லேன்; கூவிக்கொள்ளாய்; கோவே! ஓ! எப்பாலவர்க்கும் அப்பால் ஆம் என் ஆர் அமுதே! ஓ! அப்பா! காண ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே! | [2] |
சீ வார்ந்து, ஈ மொய்த்து, அழுக்கொடு திரியும் சிறு குடில் இது சிதையக் கூவாய்; கோவே! கூத்தா! காத்து ஆட்கொள்ளும் குரு மணியே! தேவா! தேவர்க்கு அரியானே! சிவனே! சிறிது என் முகம் நோக்கி, ஆ! ஆ!' என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே! | [3] |
மிடைந்து எலும்பு, ஊத்தை மிக்கு, அழுக்கு ஊறல், வீறு இலி, நடைக் கூடம் தொடர்ந்து எனை நலைய, துயர் உறுகின்றேன்; சோத்தம்! எம் பெருமானே! உடைந்து, நைந்து, உருகி, உள் ஒளி நோக்கி, உன் திரு மலர்ப் பாதம் அடைந்து நின்றிடுவான், ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே! | [4] |
அளி புண் அகத்து, புறம் தோல் மூடி, அடியேன் உடை யாக்கை, புளியம்பழம் ஒத்து இருந்தேன்; இருந்தும், விடையாய்! பொடி ஆடீ! எளிவந்து, என்னை ஆண்டுகொண்ட என் ஆர் அமுதே! ஓ! அளியேன்' என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே! | [5] |
எய்த்தேன் நாயேன்; இனி இங்கு இருக்ககில்லேன்; இவ் வாழ்க்கை வைத்தாய்; வாங்காய்; வானோர் அறியா மலர்ச் சேவடியானே! முத்தா! உன் தன் முக ஒளி நோக்கி, முறுவல் நகை காண, அத்தா! சால ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே! | [6] |
பாரோர், விண்ணோர், பரவி ஏத்தும் பரனே! பரஞ்சோதி! வாராய்; வாரா உலகம் தந்து, வந்து ஆட்கொள்வானே! பேர் ஆயிரமும் பரவித் திரிந்து, எம் பெருமான்' என ஏத்த, ஆரா அமுதே! ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே! | [7] |
கையால் தொழுது. உன் கழல் சேவடிகள் கழுமத் தழுவிக்கொண்டு, எய்யாது என் தன் தலை மேல் வைத்து, எம் பெருமான்!', பெருமான்!' என்று, ஐயா! என் தன் வாயால் அரற்றி, அழல் சேர் மெழுகு ஒப்ப, ஐயாற்று அரசே! ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே! | [8] |
செடி ஆர் ஆக்கைத் திறம் அற வீசி, சிவபுர நகர் புக்கு, கடி ஆர் சோதி கண்டுகொண்டு, என் கண் இணை களி கூர, படி தான் இல்லாப் பரம்பரனே! உன் பழ அடியார் கூட்டம், அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே! | [9] |
வெம், சேல் அனைய கண்ணார் தம் வெகுளி வலையில் அகப்பட்டு, நைஞ்சேன், நாயேன்; ஞானச் சுடரே! நான் ஓர் துணை காணேன்; பஞ்சு ஏர் அடியாள் பாகத்து ஒருவா! பவளத் திருவாயால், அஞ்சேல்' என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே! | [10] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8.126  
அதிசயப் பத்து - வைப்பு மாடென்றும்
பண் - கருடக்கொடியோன் (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அறுசீர் விருத்தம்
வைப்பு, மாடு, என்று; மாணிக்கத்து ஒளி என்று; மனத்திடை உருகாதே, செப்பு நேர் முலை மடவரலியர்தங்கள் திறத்திடை நைவேனை ஒப்பு இலாதன, உவமனில் இறந்தன, ஒள் மலர்த் திருப் பாதத்து அப்பன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே! | [1] |
நீதி ஆவன யாவையும் நினைக்கிலேன்; நினைப்பவரொடும் கூடேன்; ஏதமே பிறந்து, இறந்து, உழல்வேன் தனை என் அடியான்' என்று, பாதி மாதொடும் கூடிய பரம்பரன், நிரந்தரமாய் நின்ற ஆதி ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே! | [2] |
முன்னை என்னுடை வல் வினை போயிட, முக்கண் அது உடை எந்தை, தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன், எளியவன் அடியார்க்கு, பொன்னை வென்றது ஓர் புரி சடை முடி தனில் இள மதி அது வைத்த அன்னை, ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே! | [3] |
பித்தன்' என்று, எனை உலகவர் பகர்வது ஓர் காரணம் இது கேளீர்: ஒத்துச் சென்று, தன் திருவருள் கூடிடும் உபாயம் அது அறியாமே, செத்துப்போய், அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனை, அத்தன், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே! | [4] |
பரவுவார் அவர் பாடு சென்று அணைகிலேன்; பல் மலர் பறித்து ஏத்தேன்; குரவு வார் குழலார் திறத்தே நின்று, குடி கெடுகின்றேனை இரவு நின்று, எரி ஆடிய எம் இறை, எரி சடை மிளிர்கின்ற அரவன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே. | [5] |
எண்ணிலேன் திருநாமம் அஞ்சு எழுத்தும்; என் ஏழைமை அதனாலே நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு; நல் வினை நயவாதே, மண்ணிலே பிறந்து, இறந்து, மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை, அண்ணல், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே! | [6] |
பொத்தை ஊன் சுவர்; புழுப் பொதிந்து, உளுத்து, அசும்பு ஒழுகிய, பொய்க் கூரை; இத்தை, மெய் எனக் கருதிநின்று, இடர்க் கடல் சுழித்தலைப் படுவேனை முத்து, மா மணி, மாணிக்க, வயிரத்த, பவளத்தின், முழுச் சோதி, அத்தன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே! | [7] |
நீக்கி, முன் எனைத் தன்னொடு நிலாவகை; குரம்பையில் புகப் பெய்து; நோக்கி; நுண்ணிய, நொடியன சொல் செய்து; நுகம் இன்றி விளாக்கைத்து; தூக்கி; முன் செய்த பொய் அறத் துகள் அறுத்து; எழுதரு சுடர்ச் சோதி ஆக்கி; ஆண்டு; தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே! | [8] |
உற்ற ஆக்கையின் உறு பொருள், நறு மலர் எழுதரு நாற்றம் போல், பற்றல் ஆவது ஓர் நிலை இலாப் பரம் பொருள்: அப் பொருள் பாராதே, பெற்றவா பெற்ற பயன் அது நுகர்ந்திடும் பித்தர் சொல் தெளியாமே, அத்தன், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே! | [9] |
இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல்வினைச் சிறு குடில், இது: இத்தைப் பொருள் எனக் களித்து, அரு நரகத்திடை விழப் புகுகின்றேனை தெருளும் மும்மதில், நொடி வரை இடிதர, சினப் பதத்தொடு செம் தீ அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயம் கண்டாமே! | [10] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8.127  
புணர்ச்சிப்பத்து - சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை
பண் - கருடக்கொடியோன் (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
ஆசிரிய விருத்தம்
சுடர் பொன் குன்றை, தோளா முத்தை, வாளா தொழும்பு உகந்து கடை பட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனை, கரு மால், பிரமன், தடை பட்டு, இன்னும் சாரமாட்டாத் தன்னைத் தந்த என் ஆர் அமுதை, புடை பட்டு இருப்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே? | [1] |
ஆற்றகில்லேன் அடியேன்; அரசே! அவனி தலத்து ஐம் புலன் ஆய சேற்றில் அழுந்தாச் சிந்தை செய்து, சிவன், எம்பெருமான்,' என்று ஏத்தி, ஊற்று மணல் போல், நெக்கு நெக்கு உள்ளே உருகி, ஓலம் இட்டு, போற்றிப் புகழ்வது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே? | [2] |
நீண்ட மாலும், அயனும், வெருவ நீண்ட நெருப்பை, விருப்பிலேனை ஆண்டு கொண்ட என் ஆர் அமுதை, அள்ளூறு உள்ளத்து அடியார் முன் வேண்டும்தனையும் வாய் விட்டு அலறி, விரை ஆர் மலர் தூவி, பூண்டு கிடப்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே? | [3] |
அல்லிக் கமலத்து அயனும், மாலும், அல்லாதவரும், அமரர் கோனும், சொல்லிப் பரவும் நாமத்தானை, சொல்லும் பொருளும் இறந்த சுடரை, நெல்லிக் கனியை, தேனை, பாலை, நிறை இன் அமுதை, அமுதின் சுவையை, புல்லிப் புணர்வது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே? | [4] |
திகழத் திகழும் அடியும் முடியும் காண்பான், கீழ் மேல், அயனும் மாலும், அகழப் பறந்தும், காணமாட்டா அம்மான், இம் மா நிலம் முழுதும் நிகழப் பணி கொண்டு, என்னை ஆட்கொண்டு, ஆ! ஆ!' என்ற நீர்மை எல்லாம் புகழப் பெறுவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே? | [5] |
பரிந்து வந்து, பரம ஆனந்தம், பண்டே, அடியேற்கு அருள்செய்ய, பிரிந்து போந்து, பெரு மா நிலத்தில் அரு மால் உற்றேன், என்று என்று, சொரிந்த கண்ணீர் சொரிய உள் நீர், உரோமம் சிலிர்ப்ப, உகந்து அன்பு ஆய், புரிந்து நிற்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே? | [6] |
நினையப் பிறருக்கு அரிய நெருப்பை, நீரை, காலை, நிலனை, விசும்பை, தனை ஒப்பாரை இல்லாத் தனியை, நோக்கி; தழைத்து; தழுத்த கண்டம் கனைய; கண்ணீர் அருவி பாய; கையும் கூப்பி, கடி மலரால் புனையப் பெறுவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே? | [7] |
நெக்கு நெக்கு, உள் உருகி உருகி, நின்றும், இருந்தும், கிடந்தும், எழுந்தும், நக்கும், அழுதும், தொழுதும், வாழ்த்தி; நானா விதத்தால் கூத்து நவிற்றி; செக்கர் போலும் திருமேனி திகழ நோக்கி; சிலிர் சிலிர்த்து; புக்கு நிற்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே? | [8] |
தாதாய், மூ ஏழ் உலகுக்கும் தாயே, நாயேன் தனை ஆண்ட பேதாய், பிறவிப் பிணிக்கு ஓர் மருந்தே, பெரும் தேன் பில்க, எப்போதும் ஏது ஆம் மணியே!' என்று என்று ஏத்தி, இரவும் பகலும், எழில் ஆர் பாதப் போது ஆய்ந்து, அணைவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே? | [9] |
காப்பாய், படைப்பாய், கரப்பாய், முழுதும்; கண் ஆர் விசும்பின் விண்ணோர்க்கு எல்லாம் மூப்பாய்; மூவா முதலாய் நின்ற முதல்வா; முன்னே எனை ஆண்ட பார்ப்பானே; எம் பரமா!' என்று, பாடிப் பாடிப் பணிந்து, பாதப் பூப் போது அணைவது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே? | [10] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8.128  
வாழாப்பத்து - பாரொடு விண்ணாய்ப்
பண் - அக்ஷரமணமாலை (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
எழுசீர் விருத்தம்
பாரொடு, விண்ணாய், பரந்த, எம் பரனே! பற்று நான் மற்று இலேன் கண்டாய்; சீரொடு பொலிவாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே! ஆரொடு நோகேன்? ஆர்க்கு எடுத்து உரைக்கேன்? ஆண்ட நீ அருளிலையானால், வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள் புரியாயே. | [1] |
வம்பனேன் தன்னை ஆண்ட மா மணியே! மற்று நான் பற்று இலேன் கண்டாய்; உம்பரும் அறியா ஒருவனே! இருவர்க்கு உணர்வு இறந்து, உலகம் ஊடுருவும் செம் பெருமானே! சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே! எம்பெருமானே! என்னை ஆள்வானே! என்னை, நீ கூவிக்கொண்டருளே. | [2] |
பாடி, மால், புகழும் பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்; தேடி, நீ ஆண்டாய்; சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே! ஊடுவது உன்னோடு; உவப்பதும் உன்னை; உணர்த்துவது, உனக்கு, எனக்கு உறுதி; வாடினேன்; இங்கு வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே. | [3] |
வல்லை வாள் அரக்கர் புரம் எரித்தானே! மற்று நான் பற்று இலேன் கண்டாய்; தில்லை வாழ் கூத்தா! சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே! எல்லை மூ உலகும் உருவி, அன்று, இருவர் காணும் நாள், ஆதி, ஈறு, இன்மை வல்லையாய் வளர்ந்தாய்; வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே. | [4] |
பண்ணின் நேர் மொழியாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்; திண்ணமே ஆண்டாய்; சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே! எண்ணமே, உடல், வாய், மூக்கொடு, செவி, கண், என்று இவை நின்கணே வைத்து, மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே. | [5] |
பஞ்சின் மெல் அடியாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்; செஞ்செவே ஆண்டாய்; சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே! அஞ்சினேன் நாயேன்; ஆண்டு, நீ அளித்த அருளினை, மருளினால் மறந்த வஞ்சனேன், இங்கு வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே. | [6] |
பருதி வாழ் ஒளியாய்! பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்; திரு உயர் கோலச் சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே! கருணையே நோக்கிக் கசிந்து, உளம் உருகிக் கலந்து, நான் வாழும் ஆறு அறியா மருளனேன், உலகில் வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே. | [7] |
பந்து அணை விரலாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்; செம் தழல் போல்வாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே! அந்தம் இல் அமுதே! அரும் பெரும் பொருளே! ஆர் அமுதே! அடியேனை வந்து உய, ஆண்டாய்; வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே. | [8] |
பாவ நாசா, உன் பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்; தேவர் தம் தேவே, சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே! மூ உலகு உருவ, இருவர் கீழ் மேலாய், முழங்கு அழலாய், நிமிர்ந்தானே! மா உரியானே! வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே. | [9] |
பழுது இல் தொல் புகழாள் பங்க! நீ அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்; செழு மதி அணிந்தாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே! தொழுவனோ பிறரை? துதிப்பனோ? எனக்கு ஓர் துணை என நினைவனோ? சொல்லாய்; மழ விடையானே! வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே. | [10] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8.129  
அருட்பத்து - சோதியே சுடரே
பண் - அக்ஷரமணமாலை (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
எழுசீர் விருத்தம்
சோதியே! சுடரே! சூழ் ஒளி விளக்கே! சுரி குழல், பணை முலை மடந்தை பாதியே! பரனே! பால் கொள் வெள் நீற்றாய்! பங்கயத்து அயனும், மால், அறியா நீதியே! செல்வத் திருப்பெருந்துறையில் நிறை மலர்க் குருந்தம் மேவிய சீர் ஆதியே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே! | [1] |
நிருத்தனே! நிமலா! நீற்றனே! நெற்றிக் கண்ணனே! விண் உளார் பிரானே! ஒருத்தனே! உன்னை, ஓலம் இட்டு அலறி, உலகு எலாம் தேடியும், காணேன்; திருத்தம் ஆம் பொய்கைத் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் அருத்தனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே! | [2] |
எங்கள் நாயகனே! என் உயிர்த் தலைவா! ஏல வார் குழலிமார் இருவர் தங்கள் நாயகனே! தக்க நல் காமன் தனது உடல் தழல் எழ விழித்த செம் கண் நாயகனே! திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் அம் கணா! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே! | [3] |
கமல நான்முகனும், கார் முகில் நிறத்துக் கண்ணனும், நண்ணுதற்கு அரிய விமலனே, எமக்கு வெளிப்படாய்' என்ன, வியன் தழல் வெளிப்பட்ட எந்தாய்! திமில நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் அமலனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே! | [4] |
துடி கொள் நேர் இடையாள், சுரி குழல் மடந்தை துணை முலைக்கண்கள் தோய் சுவடு, பொடி கொள் வான் தழலில், புள்ளி போல், இரண்டு பொங்கு ஒளி தங்கு மார்பினனே! செடி கொள் வான் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவியசீர் அடிகளே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே! | [5] |
துப்பனே, தூயாய்! தூய வெள் நீறு துதைந்து எழு துளங்கு ஒளி வயிரத்து ஒப்பனே! உன்னை உள்குவார் மனத்தில் உறு சுவை அளிக்கும் ஆர் அமுதே! செப்பம் ஆம் மறை சேர் திருப்பெருந்துறையில், செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் அப்பனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே! | [6] |
மெய்யனே! விகிர்தா! மேருவே வில்லா, மேவலர் புரங்கள் மூன்று எரித்த கையனே! காலால் காலனைக் காய்ந்த, கடும் தழல் பிழம்பு அன்ன மேனிச் செய்யனே! செல்வத் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் ஐயனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே! | [7] |
முத்தனே! முதல்வா! முக்கணா! முனிவா! மொட்டு அறா மலர் பறித்து, இறைஞ்சி, பத்தியாய் நினைந்து, பரவுவார் தமக்குப் பர கதி கொடுத்து, அருள்செய்யும் சித்தனே! செல்வத் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் அத்தனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே! | [8] |
மருளனேன் மனத்தை மயக்கு அற நோக்கி, மறுமையோடு இம்மையும் கெடுத்த பொருளனே! புனிதா! பொங்கு வாள் அரவம், கங்கை நீர், தங்கு செம் சடையாய்! தெருளும் நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் அருளனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே! | [9] |
திருந்து வார் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர் இருந்தவாறு எண்ணி, ஏசறா, நினைந்திட்டு, என்னுடை எம்பிரான்' என்று என்று, அருந்தவா! நினைந்தே, ஆதரித்து அழைத்தால், அலை கடல் அதனுளே நின்று பொருந்த, வா; கயிலை புகு நெறி இது காண்; போதராய்' என்று அருளாயே! | [10] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8.132  
பிரார்த்தனைப் பத்து - கலந்து நின்னடி
பண் - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அறுசீர் விருத்தம்
கலந்து, நின் அடியாரோடு, அன்று, வாளா, களித்திருந்தேன்; புலர்ந்து போன, காலங்கள்; புகுந்து நின்றது இடர், பின் நாள்; உலர்ந்து போனேன்; உடையானே! உலவா இன்பச் சுடர் காண்பான், அலந்து போனேன்; அருள் செய்யாய், ஆர்வம் கூர, அடியேற்கே! | [1] |